இன்றைக்கு ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமும் போற்றிப் புகழ்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற மகளிருக்கான திருவிழா போன்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.
இங்கே வந்திருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளுக்கும் முதலில் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கே பல்வேறு சாகச நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டிய அத்தனை சகோதரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களை புகழ்ந்து பேசுவதும், வாழ்த்து சொல்றதும் மட்டுமே உண்மையான மகளிர் தின கொண்டாட்டமா நிச்சயமாக அமையாது. உங்களுக்கான அந்த பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வது தான், உண்மையான, மகளிர் தின கொண்டாட்டம். அதற்கு ஓர் சிறந்த உதாரணம் தான் இங்கே நடக்ககக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சி.
ஒருமுறை தந்தை பெரியாரிடம் பெண்களுக்கு உரிமை கொடுக்கணும்னு சொல்றீங்களே, அவங்களுக்கு என்னென்ன உரிமை கொடுக்கணும்னு கேட்டாங்க. அதுக்கு பெரியார் அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காம சொன்ன பதில், ஒரு ஆணுக்கு என்னெல்லாம் உரிமை இருக்கின்றதோ அந்த உரிமையெல்லாம் பெண்ணுக்கும் இருக்கணும்னு சொன்னார். அது தான் உண்மையான பெண்ணுரிமைன்னு தந்தை பெரியார் உணர்ந்தார்.
இது தான் நம்முடைய திராவிட இயக்கத்தோட கொள்கை. அதனால தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் தொடர்ந்து திட்டங்களாக செயல்படுத்தி வருகின்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கி வைத்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் போட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல தமிழ்நாடு காவல்துறையில் முதன்முறையாக பெண் காவலர்களை நியமித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இப்படி அவருடைய சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைக்கு கலைஞர் அவர்களோட வழியில நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான திட்டங்களை பார்த்து, பார்த்து செயல்படுத்தி வருகின்றார். இந்த திராவிட மாடல் அரசு, எல்லா வகையிலும் பெண்களுடைய முன்னேற்றத்துக்காக தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றது
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர் போட்ட முதல் கையெழுத்தே, பெண்களுக்கான கையெழுத்து. அதுதான் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம். அடுத்ததாக அரசுப்பள்ளியில் படிக்கக் கூடிய மாணவிகள் உயர்கல்வி படிக்க சேர்ந்தால், அவங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்கின்ற புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தானர்கள்.
இன்றைக்கு மகளிர் காலையில எழுந்ததும் காலை உணவு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது என்று பள்ளிகளில் முதலமைச்சருடைய காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கின்றார்கள்.
மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் உங்க மூலமா தான் இந்த முதலமைச்சர் காலை உணவு திட்டம் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது என்றால் அதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட உத்தரவு தான் காரணம்.
உங்க மூலமா செயல்படுத்தப்படுவதால தான் இன்றைக்கு காலை உணவுத்திட்டம் மிகப்பெரிய வெற்றித் திட்டமா, மற்ற மாநிலங்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு திட்டமாக, இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது
அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கின்ற வகையில கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்து கொண்டு இருக்கின்றார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
இந்த வரிசையில் தான், இன்றைக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 3000 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்க இருக்கிறார்கள். அதுமட்டுமில்ல, முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு குழு உறுப்பினர்களுக்கு I.D. Cards-ஐ தர இருக்கிறார்கள்.
கடந்த 4 வருஷத்துல மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கின்றது. நீங்கள், உங்களுடைய பொருளாதாரத்துக்காக குடும்பத்துல இருக்கிறவங்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாதுன்னு தான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.
இந்த வங்கிக்கடன் இணைப்பை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. சுய உதவிக்குழு சகோதரிகள் உங்கள் உழைப்பின் மீது, வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாக தான் முதலமைச்சர் அவர்கள் இதை பார்க்கின்றார்கள்
நேற்று முன் தினம் நான் திருவாரூர் மாவட்டத்துக்கு அரசு நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்கு பழவனக்குடிங்கிற கிராமத்துல சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை சந்தித்து பேசினேன். அப்போது, அந்த குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அவர்களுடைய குழுக்கள் மூலமாக கிடைச்சிருக்கக்கூடிய பலன்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார்கள். மேலும், குழுக்களை இன்னும் எப்படி சிறப்பா முன்னேற்றலாம்னு ஆலோசனைகளையும் குழு சகோதரிகள் சொன்னார்கள்.
அதுமட்டுமல்ல, அந்த குழுவைச் சேர்ந்த சகோதரி கவிதா தன்னுடைய கைப்பட ஒரு லெட்டரை பாராட்டுக் கடிதத்தை நம்முடைய முதலமைச்சருக்கு எழுதி கொடுத்திருந்தாங்க. அதுல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், நம்முடைய முதலமைச்சர் அவர்களையும் பாராட்டி அவரோட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தாங்க.
அதுமட்டுமில்ல, அந்தக் கூட்டத்துக்கு வந்த மகளிர் சிலர் குடியிருக்க முறையான வீடு இல்லன்னு கோரிக்கை வச்சாங்க. சிலர் வீட்டுமனைப் பட்டா இல்லன்னு குறைகளை சொன்னாங்க. அதையெல்லாம் எங்கள் துறையை சார்ந்த நாங்கள் அனைவரும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்துக்கு எடுத்துட்டு போனோம்.
உடனே அந்தப் பெண்களுக்கு வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகளையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகளையும் உடனே வழங்கச் சொல்லி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவு போட்டாங்க. அதன்படி, கோரிக்கை வச்ச 6 மணி நேரத்துலயே, அந்த மகளிரோட கோரிக்கைகளை நாங்க நிறைவேற்றி கொடுத்தோம்.
குறிப்பாக, கோரிக்கைகளை முன் வைத்த ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் சென்று கலைஞர் கனவு இல்லம் மற்றும் வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை நானே அவர்களது கைகளில் கொடுத்துட்டு வந்தேன்.
அந்த ஆணைகளை வாங்குனதும், அவர்களுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஏழை – எளிய மகளிரோட இந்த மகிழ்ச்சிக்குப் பேரு தான் திராவிட மாடல் அரசு.
எனவே, நம்முடைய மகளிர் நீங்கள் கேட்கின்ற அத்தனை திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள். இனியும் நீங்கள் கேட்க போகின்ற திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றி தருவார்கள்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களும், திராவிட மாடல் அரசும், நம்முடைய துறையும், என்றென்றெக்கும் உங்களுக்கு ஆதரவா இருப்போம். அதே மாதிரி இந்த அரசுக்கும், நம்முடைய முதலமைச்சருக்கும் நீங்கள் எப்போதும் ஆதரவா இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வங்கிக்கடன் இணைப்புகளைப் பெற்ற அத்தனை மகளிருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.